மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த தலித் மக்கள் நடத்திவரும் போராட்டம் ஜூலை 11 அன்று 6 ஆவது நாளை எட்டியது. ஏகோஜிமகாராஜபுரம், மேலத்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்கள் சிறிய அளவிலான காலனி வீடுகளில் கடும் நெருக்கடியான இடத்தில் வசித்து வருவதால் கடந்த பல ஆண்டுகளாக குடியிருக்க இடம் கேட்டு அரசு துறையிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 45 குடும்பங்களுக்கு பிரித்து தரவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அந்த இடத்தில் குடிசைக்கட்டி குடியேறும் போராட்டத்தை சனிக்கிழமை முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் இரவு,பகலாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.கட்சியின் மாவட்டசெயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், வாலிபர், மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் 6 ஆவது நாளான வியாழனன்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.